கோவில் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. போதை இளைஞர் கைது.. காரணம் கேட்டு அதிர்ந்த போலீசார்!

 

சென்னையில் உள்ள வீரபத்திரன் கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொத்தவால்சாவடி கோவிந்தப்ப நாயக்கர் தெருவில் வீரபத்திர சுவாமி கோவில் அமைந்துள்ளது. அதே பகுதியை சேர்ந்த முரளி கிருஷ்ணன் (38) என்பவர் மது போதையில் கையில் பெட்ரோல் குண்டோடு கோவில் முன் தகராறில் ஈடுபட்டுள்ளார். முரளி கிருஷ்ணன் கையில் பெட்ரோல் குண்டு இருப்பதை அறிந்து கோவில் உள்ளே இருந்த பூசாரி அலறி அடித்து வெளியே ஓடி வந்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் கோவில் மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளார்.

கோவிலுக்கு வெளியே விழுந்த பெட்ரோல் குண்டு வெடித்துள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்நு வந்த போலீசார், பெட்ரோல் குண்டை வீசிய முரளி கிருஷ்ணனை மடக்கி பிடித்து கைது செய்தனர். அப்போது முரளி கிருஷ்ணன் பயங்கரமான குடிபோதையில் இருந்துள்ளார்.

போலீசார் விசாரணையில், கடந்த 4 ஆண்டுகளாக இந்த கடவுளே வழிபட்டு வருவதாகவும், பிரார்த்தனை செய்து வருவதாகவும் ஆனால், கடவுள் எனக்கு திருப்பி ஏதும் தரவில்லை. அந்த கோபத்தில் குண்டு வீசினேன் என மது போதையில் கூறியுள்ளார்.

முரளிகிருஷ்ணணை கைது செய்த கொத்தவால்சாவடி போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீசிய நபர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசிய முரளி கிருஷ்ணன் அப்பகுதியில் முந்திரி, உலர் பழங்கள் விற்கும் கடை நடத்தி வந்துள்ளார். இவர் மீது ஏற்கனவே சில குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் கோவிலில் குண்டு வீசிய சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.