ஆம்லெட்டுக்காக அடித்த கொலை.. மாமன் கட்டையால் தாக்கியதில் மைத்துனர் பலி..!

 

கல்பாக்கம் அருகே மது அருந்தும் போது சைடிஷ் ஆம்லெட்டை யார் சாப்பிடுவது என்பதில் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை அவரது மாமனே அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்துள்ள புதுப்பட்டினம் உய்யாலிகுப்பம் இருளர் பகுதியில் வசித்து வந்தவர் செல்லப்பன் (30). இவரும், அதேபகுதியைச் சேர்ந்த முருகன் (32) என்பவரும் உறவினர்கள். இந்த நிலையில் இருவரும் புதுப்பட்டினம் ஈசிஆர் சாலையில் உள்ள மாருதி சுசுகி கார் ஷோரூம் அருகே தாங்கள் வாங்கி வைத்திருந்த மதுவை குடித்துள்ளனர்.

அப்போது இருவருக்கும் இடையே ஆம்லெட் சாப்பிடுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குடி போதையில் இருந்த முருகன் ஆத்திரத்தில் செல்லப்பனை கட்டையால் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்து அங்கேயே சுருண்டு விழுந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கல்பாக்கம் போலீசார், 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ குழுவினர் செல்லப்பனை பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய கல்பாக்கம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.