சீர் கொடுக்காத தாய்மாமன்.. மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற மருமகன்.. மதுரையில் பகீர் சம்பவம்!

 

மேலூர் அருகே தாயார் இறுதி சடங்கில் சீர் வழங்காத உறவினருக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிடாரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பனையன் (45). அவரது உறவினர்களான வீரணன், கருவாமொண்டி ஆகியோர் கடந்த ஜூன் 3-ம் தேதி அன்று அப்பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் மது வாங்கி அருந்தி உள்ளனர். மது அருந்திய பின் பனையன் திடீரென வாந்தி எடுத்து மயக்கமானர்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் பனையனை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

அவருடன் மது அருந்திய வீரணன், கருவாமொண்டி ஆகியோருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலூர் மேலவளவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சிகிச்சை பெற்று வந்த இருவரில் வீரணனுக்கு எந்த உடல்நலக்குறைவும் ஏற்படாததால், சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய விசாரணையில், வீரணன் தாயார் அண்மையில் காலமான போது, அவரது இறுதி சடங்கில் பனையனும் அவரது உறவினர்களும் பங்கேற்று சீர் வரிசை வழங்காததால், வீரணன் வருத்தத்தில் இருந்ததாகவும் அதன் காரணமாக மதுவில் பெயிண்ட் அடிக்க பயன்படுத்தும்  திரவத்தை கலந்து கொடுத்து பனையனை கொலை செய்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து வீரணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.