மனைவியை 17 முறை கத்தியால் குத்திக்கொன்ற காதல் கணவன்.. பொள்ளாச்சியில் அதிர்ச்சி!

 

பொள்ளாச்சி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட மனைவியை கருத்து வேறுபாடு காரணமாக 17 முறை கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தொப்பம்பட்டி புதுக்காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம் என்கிற டேவிட் (34). பெயிண்டிங் தொழிலாளியான இவருக்கு கற்பகம் (33) என்ற மனைவி இருந்தார். இவர், பல் ஸ்கேன் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இவர்கள் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 பெண், ஒரு ஆண் என மூன்று குழந்தைகள் உள்ளனர். 

இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஆறுமுகத்திற்கும், கற்பகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து ஆறுமுகம் மனைவியை பிரிந்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். கடந்த சில வாரமாக, ஆறுமுகம் பொள்ளாச்சி பகுதியில் பெயிண்டிங் வேலைக்கு வந்து சென்றார்.

அப்போது, கடந்த ஒரு வாரமாக, தொப்பம்பட்டியில் வசிக்கும் தனது வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அங்கு மனைவியிடம் தன்னுடன் சேர்ந்து வாழுமாறு வற்புறுத்தி உள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் இரவில், வேலையை முடித்துவிட்டு தொப்பம்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு ஆறுமுகம் மீண்டும் சென்றார். அப்போதும் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டு, கைக்கலப்பாக மாறியது. இருவரும் தொடர்ந்து வீட்டின் அருகே தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி கற்பகத்தை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். கத்திக்குத்துப்பட்டு, சரிந்த கற்பகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசார், கற்பகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த தொழிலாளியை வலைவீசி தேடி வருகிறார்கள்.