கள்ளக்காதலியை 14 முறை கத்தியால் குத்திக்கொன்ற கள்ளக்காதலன்.. வேறு நபர்களுடன் பேசியால் விபரீதம்!

 

அரூர் அருகே வேறு நபர்களுடன் பேசியதால் ஆத்திரம் அடைந்த கள்ளக்காதலன், கள்ளக்காதலியை கத்தியால் குத்திக்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த பேரேரிப்புதூர் அருகே உள்ள தேக்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாராம் (44). கட்டிட மேஸ்திரியான இவருக்கு ஜெயமணி (38) என்ற முதல் மனைவியும், செல்வி என்ற 2-வது மனைவியும் இருந்தனர். இந்த நிலையில் ஜெயமணிக்கும், பாறைவளவு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மனோகரன் (46) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த ராஜாராம் முதல் மனைவி ஜெயமணியை கண்டித்துள்ளார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற ஜெயமணி மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை தேடி பார்த்தபோது வனச்சாலை பெரிய மேடு பகுதியில் ஜெயமணி கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரூர் போலீசார், ஜெயமணி உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்கு அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஜெயமணி வேறு சிலருடன் பேசியதாகவும், அதனால் மனோகரனுக்கு ஜெயமணி மீது சந்தேகம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

நேற்று முன்தினம் இரவு ஜெயமணியை பார்த்து பேசிய மனோகரன் இது தொடர்பாக ஜெயமணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த மனோகரன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜெயமணியை 14 முறை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் ஜெயமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மனோகரனை கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.