மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்.. அதீத அன்பினால் கணவன் தற்கொலை!

 

சாத்தான்குளம் அருகே மனைவியை சந்தேகத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்து கணவன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கலுங்குவிளை பகுதியைச் சேர்ந்தவர் இஸ்ரவேல். இவரது மகன் பிரபாகரன் பீம்சிங் (46). இவர் அதே பகுதியில் பன்றிகள் வளர்த்து வருகிறார். இவரது மனைவி ஆஷா (34). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகளான நிலையில், ரியான் பிரபாகரன் (13) என்ற மகன் உள்ளார். பிரபாகரனுக்கு மனைவி ஆஷா மேல் தீராத காதல் இருந்து வந்துள்ளது.

மனைவி ஆஷாவுக்கு சிறிய தலைவலி, உடல்நலம் பாதிக்கப்பட்டால் கூட தனது காரில் திருநெல்வேலி அல்லது மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று நன்றாக கவனித்து வந்துள்ளார். இதற்கிடையில் மனைவி ஆஷா மீது பிரபாகரனுக்கு சந்தேகம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனைவி எங்கு சென்றாலும் இஸ்ரவேல் பின் தொடர்ந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளால் பிரபாகரன் தனது மனைவி ஆஷாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். அதன் பின்னர் மனைவி மீது இருந்த அதீத அன்பினால் என்ன செய்வது என்று தெரியாமல் தோட்டத்தில் இருந்த பூச்சிமருத்தை தானும் குடித்து விட்டு மனைவி அருகே படுத்துள்ளார்.

இன்று காலை பிரபாகரன் மகன் காலையில் வீட்டிற்கு சென்று கதவைத் தட்டி உள்ளார். வீடு திறக்காமல் இருந்துள்ளதால் அருகில் இருந்தவர்கள் வீட்டில் இருந்த ஜன்னல் கண்ணாடியை உடைத்து திறந்து பார்த்துள்ளனர். அப்போது ஆஷா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். அருகே பிரபாகரன் கிடந்துள்ளதை பார்த்து சாத்தான்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சாத்தான்குளம் டிஎஸ்பி கென்னடி தலைமையிலான போலீசார், நாசரேத் இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஜீன் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரது உடலையும் மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் பிரபாகரன் வீட்டின் முன்பு நின்ற அவரது காரை போலீசார் சோதனையிட்டனர். காரில் இருவரது உடைகள், ஹர்டை, கூல்டிரிங்ஸ் பாட்டில்களும், அதோடு பூச்சிமருந்து டப்பா மற்றும் ஒரு அரிவாளும் இருந்தது. அதையும் போலீசார் பைற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.