மனைவியை கம்பியால் அடித்துக் கொன்று தூக்கில் தொங்கவிட்ட கணவர்.. விளாத்திகுளத்தில் பயங்கரம்

 

விளாத்திகுளம் அருகே குடும்ப தகராறில் மனைவியை அவரது கணவரே அடித்துக் கொன்று தூக்கில் தொங்கவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ராமச்சந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகு பாண்டி (51). லாரி டிரைவராக உள்ளார். இவரது மனைவி கூரியம்மாள் (46). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. மகன் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.

இதனால் கணவன் - மனைவி மட்டும் ராமச்சந்திரபுரத்தில் தனியாக வசித்து வந்தனர். இவர்களுக்கு இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த அழகு பாண்டி, தனது மனைவியான கூரியம்மாளை வீட்டில் கிடந்த கம்பால் பலமாக அடித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். 

பின்னர் வீட்டில் இருந்த சேலையால் அவரது கழுத்தை இறுக்கி மின்விசிறியில் தூக்கில் தொங்கவிட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அழகுபாண்டி அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து உடனடியாக விளாத்திகுளம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கூரியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அழகுபாண்டியை தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த அவர் விளாத்திகுளம் போலீசில் சரண் அடைந்தார். தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.