திருமணமான 6 மாதத்தில் மனைவியை பிரியாணி கரண்டியால் அடித்து கொலை செய்த கணவர்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

 

அயனாபுரத்தில் மனைவியை பிரியாணி கரண்டியால் கணவர் அடித்து கொலை செய்ய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அயனாவரம் வசந்தா கார்டன், 2வது தெருவில் வசித்து வந்தவர் சையத் அலி பாத்திமா (36). இவருக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு அயனாவரம் வசந்தா கார்டன் மெயின் தெருவை சேர்ந்த ரவிக்குமார் (எ) உமர் (37) என்பவருடன் திருமணமானது. கடந்த 6 மாதமாக, சையத் அலி தனது மனைவி பாத்திமாவுடன் மாமியார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

அங்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அதே பகுதியில் தனியாக வீடு பார்த்து, நேற்று முன்தினம் அங்கு தம்பதி குடியேறியுள்ளனர். அப்போது, உமர் தனது மனைவியிடம், “இனி உனது வீட்டைச் சேர்ந்த யாரும் நமது வீட்டிற்கு வரக்கூடாது” என கூறியுள்ளார். சையத் அலி பாத்திமா இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த உமர், பிரியாணி செய்யும் கரண்டியை எடுத்து தனது மனைவின் தலையில் பலமாக அடித்துள்ளார். இதில் பாத்திமா பலத்த காயமடைந்து மயக்கமடைந்து கீழே விழுந்தார். அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர். அங்கு சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சையத் அலி பாத்திமாவின் தாயார் அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  புகாரின் பேரில் அயனாவரம் இன்ஸ்பெக்டர் பரணிநாதன், உமரை கைது செய்து அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.