16 மாத குழந்தையை மிதித்து கொன்ற கள்ளகாதலன்.. உடந்தையாக இருந்த தாய் கைது.. திருப்பூரில் பயங்கரம்!

 

திருப்பூரில் கள்ளக்காதலிக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொலை செய்து கள்ளக்காதலன், குழந்தையின் தாய், கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் பழைய ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வாடகை வீட்டில் ஸ்டீபன் ஆரோக்கியசாமி (24) மற்றும் பிரியா (21) ஆகியோர் கணவன் - மனைவி போல் வாழ்ந்து வந்தனர். கடந்த 28-ம் தேதி, பிரியாவின் 16 மாத ஆண் குழந்தை தருண், வீட்டு குளியலறையில் வழுக்கி விழுந்து மயங்கி விட்டதாக கூறி, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக குழந்தையின் உடல் மருத்துவமனையின் பிண அறையில் வைக்கப்பட்டது. போலீசார் இதுகுறித்து சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் பின்னந்தலையை தரையில் அடித்து பலத்த காயம் ஏற்பட்டும், முகத்தை அழுத்தி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ஸ்டீபன் ஆரோக்கியசாமி, பிரியா ஆகியோரிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினார்கள். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது, ஸ்டீபன் ஆரோக்கியசாமியின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் மல்லபுரம். பிரியாவின் சொந்த ஊர் திருச்சி மாவட்டம் பூங்குடியாகும். இவர்கள் இருவரும் காதலர்களாக இருந்துள்ளனர். அதன்பிறகு இருவர் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியதால் இருவருக்கும் வெவ்வேறு நபர்களுடன் திருமணம் நடைபெற்றது.

பிரியாவுக்கு 1 மகன், 1 மகள் இருந்தனர். மகளை முதல் கணவருடன் விட்டு விட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து மகனோடு திருப்பூர் வந்துள்ளார். ஸ்டீபன் ஆரோக்கியசாமியும், பிரியாவும் கடந்த 3 மாதங்களாக திருப்பூரில் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். குழந்தை அடிக்கடி அழுது கொண்டு இருந்துள்ளது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு தான் பழைய ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள வாடகை வீட்டில் இருவரும் குடியேறியுள்ளனர்.

அங்கும் குழந்தை அழுது கொண்டிருந்தது. சம்பவத்தன்று காலை கோபத்தில் ஸ்டீபன் ஆரோக்கியசாமி, குழந்தையின் தலையை பிடித்து சுவரில் அடித்தும், காலால் முகத்தில் மிதித்து அழுத்தியுள்ளார். இதில் குழந்தை மயங்கி இறந்தது. குழந்தை இறந்தது தெரிந்ததும் குளியலறையில் வழுக்கி விழுந்ததை போல் அக்கம் பக்கத்தினரையும் போலீசாரையும் இருவரும் சேர்ந்து நம்ப வைக்க நாடகமாடியது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சம்பவம் நடந்த வீட்டையும் போலீசார் சோதனை செய்து தடயங்களை பதிவு செய்தனர். மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் கைப்பற்றியுள்ளனர். பின்னர் இந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்து நேற்று ஸ்டீபன் ஆரோக்கியசாமி, பிரியா ஆகியோரை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.