கர்ப்பிணி மனைவியைக் எரித்துக் கொன்ற கணவன்.. செங்கல்பட்டில் கொடூரம்!

 

செங்கல்பட்டு அருகே 4 மாத கர்ப்பிணி மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்து உள்ள கோவிந்தாபுரம் வண்டி பாளையத்தம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராஜசேகர் (28). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகின்றார். இவரது மனைவி நந்தினி (25). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 6 வயதில் மகன் உள்ளார். மேலும் தற்போது நந்தினி நான்கு மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

இந்த நிலையில் ராஜசேகர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே தினந்தோறும் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. அதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. வழக்கம் போல நேற்று முன்தினம் மதியம் ராஜசேகர் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதில் நந்தினி தனது கணவரிடம் அடிக்கடி நீ குடித்துவிட்டு வந்தால் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி உள்ளார். மது போதை தலைகேறிய நிலையில் இருந்த ராஜசேகர், நீ என்ன தற்கொலை செய்து கொள்வது, நானே உன்னை மண்ணெண்ணெயை ஊற்றி எரித்து விடுகிறேன் என கூறி வீட்டில், இருந்த மண்ணென்ணெயை எடுத்து நந்தினி மேல் ஊற்றி தீவைத்து எரித்துள்ளார்.

அதனை தொடர்ந்து அவர் தனது 6 வயது மகனை தூக்கிக்கொண்டு வீட்டை பூட்டி விட்டு வெளியே வந்துள்ளார். நந்தினியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் நந்தினி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருடைய உடல் பிரேத பரிசோதனை செய்ய அனுபியுள்ளனர்.

மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்து விட்டு தப்பியோடிய ராஜசேகரை மறைமலைநகர் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 4 மாத கர்ப்பிணி மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.