தலித் இளம்பெண் கடத்தல்.. கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற காவலர்கள்.. ராஜஸ்தானில் கொடூரம்!

 

ராஜஸ்தானில் தலித் இளம்பெண்ணை கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பைகானர் பகுதியில் உள்ள கஜூவாலா பகுதியில் 20 வயது பெண் வசித்து வந்துள்ளார். தலித் சமூகத்தை சேர்ந்த இந்த பெண் வீட்டின் அருகே உள்ள கோச்சிங் சென்டரில் கம்ப்யூட்டர் வகுப்பிற்கு சென்று வந்துள்ளார். கடந்த 15 நாளாக இவர் கம்ப்யூட்டர் வகுப்புக்கு செல்லும் போது அப்பகுதியை சேர்ந்த தினேஷ் என்ற வாலிபர் மாணவியை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

இது தொடர்பாக அந்த இளம்பெண் தனது வீட்டாரிடமும், பயிற்சி மையத்திடமும் தெரிவித்துள்ளார். மேலும், போலீசார் கவனத்திற்கும் இது கொண்டு செல்லப்பட்டது. இருப்பினும் வாலிபர் தினேஷ் தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வந்தநிலையில், கடந்த செவ்வாய்கிழமை (ஜூன் 20) அன்று மாணவியை தினேஷ் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள்கள் மனோஜ் குமார் மற்றும் பகிரத் குமார் ஆகிய மூன்று பேரும் கடத்தி சென்றுள்ளார். 

பின்னர் இவர்கள் மூவரும் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நிலையில், உயிருக்கு போராடிய அவரை மருத்துவமனையில் கொண்டு விட்டு அங்கிருந்த தப்பியோடியுள்ளனர். இதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை அறிந்த இளம்பெண்ணின் உறவினர் போலீசார் உள்ளிட்ட மூன்று பேரையும் கைது செய்யாமல் பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டேன் என தர்ணா செய்தனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஐஜி ஓம் பிரகாஷ் சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு விரிவான விசாரணை நடத்தி நீதி பெற்று தரும் எனவும், இரு காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் எனவும் குடும்பத்தாரிடம் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. தினேஷ் மற்றும் இரு காவலர்கள் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தினேஷ் தலைமறைவாக உள்ளதாகவும் இதுவரை சம்பவம் தொடர்பாக இதுவரை கைது நடவடிக்கை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தாரும் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.