சமூக வலைதளங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது அவதூறு... கன்னியாகுமரி மாவட்ட பாஜக கவுன்சிலர் கைது!

 

முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் பேரூராட்சி பாஜக கவுன்சிலர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்டம் தென் தாமரைகுளம் பகுதியில் வசித்து வருபவர் சுபாஷ் சுயம்பு. இவர் பாஜக ஐடி பிரிவில் மாவட்ட துணை தலைவராக உள்ளார். மேலும் தென் தாமரைகுளம் பேரூராட்சி வார்டு கவுன்சிலராகவும் பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், திமுக வழக்கறிஞர் சிவ கோடீஸ்வரன் என்பவர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், “இரு பிரிவினர் இடையே கலவரத்தை தூண்டும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவும் கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் பேரூராட்சி பாஜக கவுன்சிலர் சுபாஷ் சுயம்பு ஒரு வீடியோவை  பதிவு செய்துள்ளார். எனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்பிய அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என கூறியிருந்தார்.

இதையடுத்து, சைபர் கிரைம் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியது தெரியவந்தது. இதையடுத்து, பாஜக நிர்வாகி சுபாஷ் சுயம்பு மீது  153 ஏ , 505 (1) , 506 (2) , 504  , 295 ஏ உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.