இன்ஸ்டா காதல்... தாயின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஏசி மெக்கானிக்!

 

ஊரப்பாக்கம் அருகே காதல் தோல்வியால் ஏசி மெக்கானிக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே உள்ள காரணை புதுச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகபுரம் 2-வது தெருவில் வசித்து வந்தவர் மோகன்ராஜ் (24). இவர் ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக மோகன்ராஜை மீட்டு கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு மோகன்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார் மோகன்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தபோது ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வந்த மோகன்ராஜ் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்ட ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்து வந்துள்ளார்.

அந்த பெண்ணும் இவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் இருவருடைய காதலும் முடிவுக்கு வந்த நிலையில் காதல் தோல்வி காரணமாக மோகன்ராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து தீவிரமாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.