மாந்தோப்பில் கணவன் மனைவி கல்லால் அடித்துக் கொலை.. போலீசாரிடம் இருந்த தப்பிக்க மிளகாய் பொடி தூவிவிட்ட மர்ம நபர்கள்..!

 

வாங்கல் அருகே தோட்டத்தில் தங்கியிருந்த வயதான தம்பதியினரை கொன்று நகை கொள்ளை அடிக்கபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்த ஓடையூர் பகுதியில் உள்ள சரவணக்குமார் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பு உள்ளது. இந்த தோப்பை திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் (67) தனது மனைவி மைதிலியோடு (61) கடந்த 15 ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார். அங்கு விளையும் பழங்களையும் விற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் ஓடையூரைச் சேர்ந்த வாசுகி மற்றும் பாலம்மாள் ஆகிய இருவரும் இன்று காலை எப்போதும் போல வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது இருவரும் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து தோப்பின் உரிமையாளர் சரவணகுமாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து வாங்கல் போலீசாருக்கு சரவணகுமார் தகவல் கொடுத்துள்ளார். 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மைதிலி காது மற்றும் மூக்கு கழுத்து பகுதியில் ரத்த காயம் இருந்தது. அணிந்திருந்த தங்க நகைகளுக்காக இருவரையும் கொலை செய்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சினிமாவில் வரும் சம்பவம் போல போலீஸ் மோப்ப நாய்கள் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக கொலை நடந்த இடத்தில் மிளகாய்பொடி தூவிச் சென்றுள்ளனர். கொலை நடந்த இடத்திற்கு  சென்ற கரூர் காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். தோட்டத்தில் தங்கியிருந்த வயதான தம்பதியினரை கொன்று நகை கொள்ளை அடிக்கபட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.