தூக்குப்போட்டு ப்ளஸ்-2 மாணவி தற்கொலை.. தோழிகள் படிக்கும் அரசு பள்ளியில் சேர்த்து விடாததால் விபரீதம்!
வெள்ளகோவில் அருகே தோழிகள் படிக்கும் அரசு பள்ளியில் சேர்த்து விடாததால் ப்ளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே கரட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சிவகுமார். சுமைதூக்கும் தொழிலாளி. இவரது மனைவி வளர்மதி. இவர்களது மகள் சத்தியா (17). இவர் தனியார் பள்ளியில் ப்ளஸ்-2 படித்து வந்தார்.
இவருடைய தோழிகள் அரசு பள்ளியில் படித்து வருகிறார்கள். எனவே தன்னையும் அரசு பள்ளியில் சேர்த்து விடுமாறு பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதற்கு பெற்றோர் மறுத்து விட்டனர். இதனால் மன உளைச்சலில் சத்தியா இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டனர். இதனால் வீட்டில் தனியாக இருந்த சத்தியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலை முடிந்து வந்த பெற்றோர் மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெள்ளகோவில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜமூர்த்தி மற்றும் போலீசார், சத்தியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சத்தியா தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.