அரசு பள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லை.. இயற்பியல் ஆசிரியர் மீது பாய்ந்தது போக்சோ..!
கன்னியாகுமரி அருகே அரசுப்பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் அருள் ஜீவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள ஆலங்கோடு பகுதியில் வசித்து வருபவர் மகேஷ்வரன் (40). ஓட்டுநரான இவருக்கு 2 பெண் மற்றும் 1 ஆண் பிள்ளைகள் உள்ளனர். இதில் 13 வயதான மகன் கண்ணாட்டுவிளை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த மாதம் 14-ம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவன் மதிய உணவு சாப்பிட்ட பின் சிறுநீர் கழிப்பதற்கு கழிப்பறைக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த அந்த பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் அருள் ஜீவன் மாணவனை ஆய்வகத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. நடந்த சம்பவத்தை மாணவன் தந்தையிடமும் கூறியுள்ளார். இதனையடுத்து தந்தை மகேஷ்வரன் 21-ம் தேதி குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்தார்.
புகாரின் பேரில் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சங்கீதா அன்பு ஜூலியட் மற்றும் உதவி ஆய்வாளர் பிரேமா ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் மற்றும் கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆசிரியர் அருள் ஜீவன் மாணவனிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து இயற்பியல் ஆசிரியர் அருள் ஜீவன் மீது போக்சோ சட்ட பிரிவு 7, 8, 9F, மற்றும் 10 ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் தலைமறைவாக இருக்கும் இயற்பியல் ஆசிரியர் அருள் ஜீவனை வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியர் அருள் ஜீவனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டுள்ளார்.