படிக்க சொல்லி கண்டித்த அரசு பள்ளி ஆசிரியர்.. அரிவாளால் வெட்டிய மாணவர்கள்.. சிவகாசி அருகே பரபரப்பு!

 

சிவகாசி அருகே நன்றாக படிக்க சொல்லி கண்டித்த ஆசிரியரை மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியில் எஸ்.ஆர்.என் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பொருளாதார பிரிவு ஆசிரியராக கடற்கரை (42) என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 2 பேரை நன்றாக படிக்க சொல்லி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மாணவர்கள் இரண்டு பேரும் அவர் மீது கடுமையான கோபத்தில் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை ஆசிரியர் வழக்கமாக பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மாணவர்கள் இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை தலையில் தாக்கி விட்டு தப்பி ஓடி உள்ளனர். ஆசிரியரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் இந்த இரு மாணவர்களும் 10-ம் வகுப்பில் தோல்வி அடைந்து தனித்தேர்வு எழுதிவிட்டு மீண்டும் 11-ம் வகுப்பில் சேர்ந்துள்ளது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து சிவகாசி டிஎஸ்பி தனஞ்ஜெயன் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

இந்த சம்பவத்தின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் நான்கு தனிப்படை அமைத்து ஆசிரியரை வெட்டிச் சென்ற மாணவர்களை தேடி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி காணப்படுகின்றது.