ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட நண்பர்கள்.. வீடியோ எடுத்து மிரட்டிய கல்லூரி மாணவர் படுகொலை!

 

மதுரை அருகே ஓரின சேர்க்கையால் நண்பனை குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரவுதீன். இவரது மகன் பைசல் அப்துல்லா பவாத் (25). இவர், ஒத்தக்கடை அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் மாயமானார். இந்த நிலையில், அழகர்கோவில் அருகில் உள்ள மாங்குளம் மலையடிவார பகுதியில் கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் அவரது உடல் கிடந்தது தெரியவந்தது.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒத்தக்கடை போலீசார் கொலை சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அதில், மதுரை ஆத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் (19) என்பவருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் அளித்த தகவல்கள் குறித்து போலீசார் கூறுகையில், பைசல் அப்துல்லா பவாத் மற்றும் ஜெயசீலன் ஆகியோர் கடந்த 6 மாதங்களாக நண்பர்களாக இருந்துள்ளனர். அவர்கள் இருவரும் இணைந்து இயற்கை காட்சிகளை படம் எடுப்பதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.

இந்த நிலையில், அவர்களுக்குள் ஓரின சேர்க்கை இருந்துள்ளது. ஓரின சேர்க்கையில் அவர்கள் ஈடுபட்டபோது, அதனை பைசல் வீடியோ எடுத்துள்ளார். மேலும், அந்த வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விடுவதாகவும் ஜெயசீலனை மிரட்டி உள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த ஜெயசீலன், பைசலை தனியாக அழகர்கோவில் பகுதியில் உள்ள மலைக்கு அழைத்து சென்றுள்ளார். அதன்பின்னர் அங்கிருந்து அவரை தள்ளிவிட்டதுடன், கத்தியால் அவரை குத்திக்கொலை செய்துள்ளார். அதன்பேரில் ஜெயசீலனை கைது செய்து தொடர்ந்து விசாரிக்கிறோம் என்றனர்.