முதல மதுப்பழக்கம்... அடுத்து கஞ்சா... அடிமையான மகனை அடித்தே கொன்ற தந்தை!! மதுராந்தகம் அருகே பரபரப்பு

 

மதுராந்தகம் அருகே போதைக்கு அடிமையான மகனை தந்தையே அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் அருகே உள்ள புளியங்கரணை கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (57) . இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது இளைய மகன் ஆனந்த் (26), வீட்டில் தந்தை சொல்வதை கேட்காமல் இருந்து வந்துள்ளார். ஆரம்பத்தில் ஆனந்த் குடிபோதைக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்த நிலையில், சமீப காலமாக கஞ்சா போதைக்கும் அடிமையாகி உள்ளார்.

இதனையடுத்து தந்தை சேகர் மகனை திருந்த கோரி பலமுறை சண்டையிட்டும் அன்பாக கூறியும் வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் ஆனந்த் வேலைக்கும் செல்லாமல் அண்ணன் கொண்டுவரும் பணம் மற்றும் தந்தை சம்பாதிக்கும் பணம் ஆகியவற்றை எடுத்து செலவு செய்து வந்துள்ளார். இதன்காரணமாக தந்தை சேகர் மற்றும் மகன் ஆனந்த் ஆகிய இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது அண்ணனுடன் சென்னை தாம்பரம் சானடோரியம் பகுதியில் உள்ள வாட்டர் வாஷ் கம்பெனிக்கு தந்தையின் வற்புறுத்தலின் பெயரில் வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு வீடு திரும்பிய ஆனந்த், முழு குடிபோதையில் வந்துள்ளார். குடிபோதையில் வந்த ஆனந்தை அவரது தந்தை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த் தந்தையை கண்முன் தெரியாமல் திட்டியது மட்டும் இல்லாமல் தாக்கவும் செய்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த  சேகர் வேறு வழியின்றி மகன் அடிப்பதற்கு பயன்படுத்திய கட்டையை பிடுங்கி  அடித்துள்ளார். இதில் தலை கால் உள்ளிட்ட பகுதிகளில் ஆனந்துக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து, ரத்த வெள்ளத்தில் ஆனந்த் சரிந்து விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் ஆனந்தை மீட்டு சிக்கிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்த் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சித்தாமூர் போலீசார், தந்தை சேகரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போதைக்கு அடிமையான மகனை தந்தையே அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.