பெண் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை.. சாவில் மர்மம் இருப்பதாக தந்தை பரபரப்பு புகார்

 

சின்னமனூரில் குடும்ப தகராறில் பெண் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூர் சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சின்னமனூர் காந்தி சிலை பகுதியில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி மணிமாலா (38). இவர், சின்னமனூர் அரசு மருத்துவமனையில் தோல் நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்த நிலையில், வீட்டின் ஒரு அறையில் படுத்திருந்த மணிமாலா நேற்று காலை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மணிகண்டன், மனைவியை மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சின்னமனூர் போலீசார், அவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, மணிமாலாவின் தந்தை மாரியப்பன், தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மணிமாலா தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.