கணவரை பிரிந்த காதலிக்கு வலை விரித்த முன்னாள் காதலன்.. பேச மறுத்ததால் கத்தியால் குத்திய கொடூரம்!

 

திருப்பத்தூர் அருகே கணவரை பிரிந்த காதலியுடன் மீண்டும் பழகி வந்த இளைஞர், திடீரென அவரை நடுரோட்டில் வைத்து கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் அருகே ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் அஜித்குமார். ஆட்டோ ஓட்டுநரான இவர், பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவர, அவர்கள் கடந்த 7 வருடங்களுக்கு முன்பே வேறொருவருக்கு அந்த பெண்ணை திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

அந்த பெண்ணிற்கு 5 வயதில் பெண் குழந்தை ஒன்றுள்ள நிலையில், திடீரென கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அப்பெண் கணவரை பிரிந்ததாக கூறப்படுகிறது. கணவரை பிரிந்த தன் காதலியுடன் அஜித்குமார் மீண்டும் பழகி வந்திருக்கிறார்.

இந்த நிலையில், திடீரென அப்பெண் அஜித்குமாருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகே அந்த பெண்ணை வழிமறித்து கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே அஜித்குமார் தானாகவே திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து அஜித்குமாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.