சித்த மருத்துவர் மற்றும் மனைவி கழுத்தறுத்து கொலை.. மர்ம நபர்கள் வெறிச்செயல்

 

சென்னையில் சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவியை மர்ம நபர்கள், படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை அருகே மிட்டனமல்லி தேவர் நகரில் வசித்து வந்தவர் சிவம் நாயர் (72). சித்தா டாக்டரான இவர் தனது வீட்டிலேயே கிளினிக் வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி பிரசன்னா (60). இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மகனும் சித்தா டாக்டராக பணியாற்றி வருகிறார். வயதான தம்பதி இருவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். 

இந்நிலையில் நேற்று இரவு சித்தா டாக்டரான சிவம் நாயர் அவரது மனைவி பிரசன்னா ஆகிய இருவரும் கழுத்து அறுபட்ட நிலையில் வீட்டில் பிணமாக கிடந்துள்ளனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் பார்த்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முத்தாபுதுபேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது சிவம் நாயர் அவரது மனைவி பிரசன்னா ஆகிய இருவரும் வீட்டுக்குள் கழுத்தில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளனர். கொலை செய்து விட்டு நகை, பணம் திருடப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர். 

இந்த நிலையில், கொலை நடைபெற்ற இடத்தில் இருந்து செல்போன் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. செல்போன் கைப்பற்றப்பட்டதன் அடிப்படையில் மகேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் மருத்துவம் பார்க்க வந்து சென்றவர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.