திமுக கவுன்சிலரின் மாமியார் குளத்தில் மூழ்கடித்து கொலை

 

அறந்தாங்கி அருகே திமுக கவுன்சிலரின் மாமியர் குளத்தில் மூழ்கடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசர்குளம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் சாத்தையா. இவரது மனைவி சத்தியம்மாள் (75). இவர்களது மகன் செல்வம். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர் அறந்தாங்கி திமுக கிழக்கு ஒன்றிய துணை செயலாளராகவும், ஒன்றிய கவுன்சிலராகவும் உள்ளார்.

இந்த நிலையில் சத்தியம்மாள் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள கோட்டை குளத்துக்கு குளிக்க சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் அவரை தேடி குளத்திற்கு சென்றனர். அப்போது சத்தியம்மாள், குளத்தின் கரையோரம் தண்ணீரில் பிணமாக மிதந்தபடி கிடந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் குளத்தில் இருந்து சத்தியம்மாளின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் இதுகுறித்து நாகுடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில், சத்தியம்மாளை தண்ணீரில் மூழ்கடித்து கொன்று விட்டு அவரது கழுத்தில் கிடந்த தங்க கம்மல் மற்றும் தங்க சங்கிலி உள்பட 8 சவரன் நகைகளை மர்மநபர் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதற்கிடையே போலீசார் சத்தியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையாளியை கைது செய்ய புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அரசர்குளம் பேட்டை பகுதியை சேர்ந்த இப்ராஹிம்ஷா மகன் முகாஸ்ரின் (25) என்பவர் மூதாட்டியை தண்ணீரில் மூழ்கடித்து கொன்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மேலும் அவர் வீட்டில் எலி வலைக்குள் மறைத்து வைத்திருந்த 8 சவரன் நகைகளை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.