உல்லாசத்துக்கு இடையூறு..  வாயில் மதுவை ஊற்றி ஒரு வயது குழந்தை அடித்து கொலை செய்த கொடூர தாய்!

 

கன்னியாகுமரி அருகே உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த ஒரு வயது குழந்தையை தாய் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் இரையுமன்துறை பகுதியைச் சேர்ந்தவர் சீனு (28). இவரது மனைவி பிரபுஷா (23). இவர்கள் இருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த நிலையில், நட்சன் ராய் (3), அரிஸ்டோ பியூலன் (1) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பிரபுஷாவுக்கும், நித்திரவிளை அருகே உள்ள காஞ்சாம்புரம் பகுதியைச் சேர்ந்த முகமது சதாம் உசேன் (32) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக சந்தித்து வந்தனர். இந்த விவகாரம் சீனுவுக்கு தெரிந்ததால் கடந்த 8 மாதங்களுக்கு முன் இருவரும் பிரிந்தனர்.

இதில் சீனுவிடம் மூத்த குழந்தையும், பிரபுஷாவிடம் 2வது குழந்தை அரிஸ்டோ பியூலனும் இருந்தனர். சீனுவை பிரிந்த பிரபுஷா, முகமது சதாம் உசேனுடன் தூத்துக்குடியில் வாடகை வீட்டில் குடியேறினார். குழந்தை அரிஸ்டோ பியூலனும் அவர்களுடன் தான் இருந்தான். இவர்கள் இருவரும் கடந்த 14-ம் தேதி, குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அடுத்த மயிலாடி அருகே உள்ள ஒரு கோழிப்பண்ணையில் வேலைக்கு வந்தனர். கோழிப்பண்ணை அருகில் உள்ள வீட்டில் இவர்கள் தங்கி இருந்தனர்.

நேற்று முன்தினம் இரவு குழந்தைக்கு திடீரென உடல் நிலை சரியில்லை என கூறி அரிஸ்டோ பியூலனை, கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில் குழந்தை இறந்தது தெரியவந்தது. குழந்தையின் உடலில் காயங்கள் இருந்ததுடன், குழந்தை மீது மது வாடை வீசியதால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அஞ்சுகிராமம் போலீசார், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரபுஷா, முகமது சதாம் உசேன் ஆகியோரை அஞ்சுகிராமம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் தங்கி இருந்த வீட்டிலும் சோதனை நடந்தது. இதில் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் குழந்தை அரிஸ்டோ பியூலனை இருவரும் சேர்ந்து மது கொடுத்து அடித்து கொலை செய்தது தெரிய வந்தது. இதை கேட்டதும் போலீசாரே அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பிரபுஷா, முகமது சதாம் உசேன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடந்த விசாரணையில் பல திடுக் தகவல்கள் தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது, நேற்று முன்தினம் இரவு இருவரும் உல்லாசமாக இருந்த போது திடீரென குழந்தை அரிஸ்டோ பியூலன் அழுதுள்ளான். இதனால் எரிச்சல் அடைந்த முகமது சதாம் உசேன், குழந்தையை தூங்க வை என கூறி உள்ளார். ஆனால் குழந்தை தூங்காமல் அழுது கொண்டே இருந்ததால், தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த மதுவை குழந்தைக்கு இருவரும் கொடுத்தனர். குழந்தை குடிக்க மறுத்ததால், ஸ்பூன் மூலம் வாயில் ஊற்றினர். அப்போதும் குழந்தை குடிக்காததால் ஸ்பூன் வைத்து வாயில் பயங்கரமாக இடித்தனர்.

இதில் வாயில் பலத்த காயம் ஏற்பட்டு குழந்தை கதறியது. குழந்தையின் அழுகுரல் அதிகமாக கேட்டதை தொடர்ந்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விசாரித்துள்ளனர். அப்போது காய்ச்சல் அடிப்பதாகவும், மருந்து குடிக்க அடம் பிடிப்பதாகவும் கூறி இருவரும் சமாளித்துள்ளனர். பின்னர் அழுகையை நிறுத்து என கூறி உருட்டு கட்டையால் முதுகில் அடித்துள்ளனர். இதில் சிறிது நேரத்தில் குழந்தை மயங்கி பரிதாபமாக இறந்தது. பின்னர் யாருக்கும் தெரியாமல் குழந்தையை புதைத்து விட வேண்டும் என திட்டமிட்டுள்ளனர். ஆனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் குழந்தை எங்கே? என கேட்டால் சமாளிக்க முடியாது என்பதால், அவர்களை நம்ப வைப்பதற்காக உடல் நிலை சரியில்லை என கூறி மருத்துவமனைக்கு தூக்கி வந்தது தெரிய வந்தது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் பிரபுஷாவின் உறவினர்கள் மற்றும் சீனுவின் உறவினர்களும் நேற்று மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்திருந்தனர். குழந்தையின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. குழந்தையை வளர்க்க முடிய வில்லை என்றால் எங்களிடம் தந்து இருக்க வேண்டியது தானே என கூறி சீனுவின் குடும்பத்தினர் கதறினர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தற்போது சீனுவின் தந்தை ராஜ் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்து, அதன் புகாரின் பேரில் முகமது சதாம் உசேன், பிரபுஷா ஆகியோர் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கைதாகி உள்ள முகமது சதாம் உசேன், ஏற்கனவே நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்து சில ஆண்டுகள் குடும்பம் நடத்தி உள்ளார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண்ணை பிரிந்த முகமது சதாம் உசேன், பின்னர் திங்கள் சந்தையை சேர்ந்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்து அவரையும் பிரிந்துள்ளார். பிரபுஷாவுக்கு சொந்த ஊர் குமரி மாவட்டம் தூத்தூர் ஆகும். தூத்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு முகமது சதாம் உசேன் செல்லும் போது, பிரபுஷாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிரபுஷாவின் கணவர் சீனு, மீன்பிடி தொழில் செய்கிறார். அவர் வெளியூர் சென்ற சமயங்களில் இவர்கள் ரகசியமாக சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.