ஓரின சேர்க்கைக்கு மறுப்பு.. ப்ளஸ்-2 மாணவன் கொலை.. தலைமறைவான கொளையாளியை தட்டி தூக்கிய போலீஸ்!

 

ஸ்ரீமுஷ்ணம் அருகே 12-ம் வகுப்பு மாணவன் கொலை வழக்கில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல் புளியங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவா (17). இவர், விருத்தாசலம் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம் போல, கடந்த அக்டோபர் 3-ம் தேதி பள்ளிக்குச் செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் ஆனந்த் என்பவர், மாணவனிடம் தனியாக பேச வேண்டும் என்று கூறி அழைத்து சென்றுள்ளார். 

அருகேயுள்ள ஓடை அருகே சென்று பேசிக்கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ஆனந்த் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவனை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் மாணவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மாணவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மாணவரின் உடலை கைப்பற்றிய போலீசார் கொலை தொடர்பாக விசாரணை நடத்தியதில் ஓரின சேர்க்கைக்கு ஒத்துழைக்க மறுத்ததால், பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, தனிப்படை அமைத்து குற்றவாளியை போலீசார் தேடி வந்தனர். கொலையாளியின் செல்போன் சிக்னலின் அடிப்படையில் அவர் சென்னையில் இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் சென்னைக்கு விரைந்த போலீசார் ஆனந்தை கைது செய்தனர். போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக, ஆனந்த் மொட்டை அடித்து கொண்டு மாறு வேடத்தில் சென்னையில் சுற்றித்திரிந்ததும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து ஆனந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.