கடன் தொல்லை.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை.. கோவையில் பகீர் சம்பவம்!

 

கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வடவள்ளி வேம்பு அவன்யூ பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (34). இவர் தனியார் இன்ஜினியரிங் டிசைனராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி லக்ஷயா. குழந்தைகளுக்கு டியூசன் எடுத்து வந்தார். இந்த தம்பதிக்கு ரக்ஷிதா (10) என்ற மகள் உள்ளார். இவர்களுடன் ராஜேஷின் தாயார் பிரேமா (73) வசித்து வந்தார்.

இந்த நிலையில் ராஜேஷின் வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு ராஜேஷ் தூக்கில் தொங்கிய நிலையிலும், ராஜேஷின் தாயார் பிரேமா, மனைவி லக்ஷயா, மகள் ரக்ஷிதா ஆகியோர் விஷம் குடித்தும் வீட்டிற்குள் பிணமாக கிடந்தனர்.

மேலும் அவர்கள் இறந்து 2 நாட்கள் இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். பின்னர் பிணமாக கிடந்த 4 பேரின் உடலையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக 4 பேரும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. விசாரணைக்கு பின்னர் தீபக், ஜெயபாரத் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வடவள்ளி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.