ஜாமீனில் வெளிவந்த குற்றவாளி ஓட ஓட வெட்டிக்கொலை.. தஞ்சை அருகே பயங்கரம்

 

தஞ்சாவூர் அருகே பட்டபகலில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் அருகே ரெட்டிபாளையம் சாலை, காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் சதீஷ்குமார் (27). இவர் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் 1-ம் தேதி இரவு, ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரை, கொலை செய்து தலையை துண்டித்து, உடலை தண்டவாளத்திலும், தலையை சப்த கன்னியம்மன் கோவில் வாசல் முன்பாகவும் வைக்கப்ப்பட்ட வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த சதீஷ்குமார் நேற்று வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில்  ஆஜராகி விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது நண்பரான சேப்பனாவாரியை சேர்ந்த சபில் என்பவர் விபத்தில் காயமடைந்து மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அறிந்தார்.

அவரை தனது நண்பர்களுடன் சதீஸ்குமார் நேற்று மதியம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் இருந்தார். அப்போது, இறந்த மணிகண்டனின் நண்பர்கள் சிலர், சதீஸ்குமார் மருத்துவக்கல்லுாரிக்கு வந்துள்ளதை அறிந்து அங்கு வந்தனர். பிறகு சதீஸ்குமாரிடம் பேச வேண்டும் என, மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு எதிரே உள்ள டீக்கடைக்கு அழைத்து சென்றனர்.

இதையடுத்து தனியாக சென்ற சதீஸ்குமார் வெகு நேரமாகியும் வரவில்லை என்பதால், அவரது நண்பர்கள் சென்று பார்த்து போது, ரத்த வெள்ளத்தில் வெட்டு காயங்களுடன் கிடந்தார். உடனே நண்பர்கள் சதீஸ்குமாரை சிகிச்சைக்காக துாக்கி வந்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த மருத்துவக்கல்லுாரி போலீசார் நடத்திய விசாரணையில், டீக்கடை பகுதியில் அரிவாளை முன்கூட்டியே பதுக்கி வைத்து விட்டு, சதீஸ்குமாரை அழைத்து சென்று, மூன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் வெட்டியுள்ளது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.