கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை.. காதல் தோல்வியால் விபரீதம்!

 

செங்குன்றத்தில் கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை செங்குன்றம் காந்தி நகர் அறிஞர் அண்ணா முதல் தெருவில் வசித்து வருபவர் அந்தோணி. இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் அருள் ஆனந்த் (21). இவர், சென்னையை அடுத்த மதுரவாயலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி விஸ்காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த அருள் ஆனந்த், வீட்டின் அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாக அறையில் இருந்து மகன் வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் அறையில் வந்து பார்த்தனர்.

அப்போது மகன் தூக்கில் தொங்கியதை கண்டு கதறி அழுதனர். இதையடுத்து சம்பவம் தொடர்பாக சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் மாணவன் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அருள் ஆனந்த் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.