தங்கையின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற அண்ணன்.. திருவண்ணாமலையில் பயங்கரம்!

 

வாணாபுரம் அருகே தங்கையை அண்ணனே அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள தொண்டமானூர் பகுதியை சேர்ந்தவர் தனபால் (55). இவருக்கு துக்கச்சி (25), தமிழ்செல்வி (19) என 2 மகள்களும், துக்கையன் (22) என்ற மகனும் உள்ளனர். துக்கச்சி திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். துக்கையனும், தமிழ்ச்செல்வியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்.

இந்த நிலையில் நேற்று துக்கையன் திடீரென தமிழ்ச்செல்வியின் தலை மீது அம்மிக்கல்லை போட்டுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தமிழ்செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து துக்கையனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கையை அண்ணனே அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.