பகுஜன் சமாஜ் மாநில தலைவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை.. சென்னையில் பரபரப்பு!

 

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட செய்தி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங். சென்னை பெரம்பூர் அருகே செம்பியன் பகுதியில் வசித்து வந்தார். இன்று இன்று இரவு 7 மணியளவில் வீட்டின் முன் நின்று சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் ஆம்ஸ்ட்ராங்கிடம் பேச்சு கொடுப்பது போல் வந்து அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் கை, கழுத்தில் அரிவாள் வெட்டு விழுந்தது. 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் இந்த கொடூர தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது. அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார்.

இதையடுத்து ரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங்கை கிரீம் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலினின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கொலை குற்றவாளிகளை பிடிக்க போலீசார் 5 தனிப்படை அமைத்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங்கின் உடல் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் அப்பகுதியில் குவிந்துள்ளனர். போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி கொலையாளிகளை வலைவீசித் தேடி வருகின்றனர். 

மேலும் பெரம்பூர், செம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் நாட்டு வெடிகுண்டுகளையும் போலீசார் கண்டெடுத்துள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.