பாலியல் புகார் அளித்த இளம் பெண்.. நடிகர் விஜய்யின் அலுவலக ஊழியர் கைது!

 

நடிகர் விஜய்யின் அலுவலக கணக்காளர் ராஜேஷ் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் அண்ணாநகர் மகளிர் காவல் நிலையத்தில் கடந்த நவம்பர் மாதம் ஒரு புகாரை கொடுத்தார். அந்த புகாரில், சோசியல் மீடியாவில் நடிகர் விஜய்யின் கணக்காளர் என கூறி அவருடன் இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டிருந்த சென்னை கிண்டி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (32) என்பவர் எனக்கு என் தோழி மூலம் அறிமுகமானார்.

அவருடன் நண்பராக நினைத்து பழகினேன். திடீரென என்னை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் என்னிடம் உறுதி அளித்தார். அதன் பேரில் என்னை பல முறை தனி இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அது போல் என்னிடம் பல்வேறு காரணங்களை கூறி ரூ. 10 லட்சம் வரை பணம் பெற்றுள்ளார்.

இந்த நிலையில்தான் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தைகள் இருந்த விஷயம் எனக்கு தெரியவந்தது. இதையடுத்து நான் அவரிடம் நியாயம் கேட்க போன போது என்னை மிரட்டினார். இருப்பதென்றால் என்னுடன் எப்போதும் போல் இருந்து கொள். திருமணம் எல்லாம் செய்து கொள்ள முடியாது என்றார்.

மேலும் மீறி என்னை தொல்லை செய்தால் இருவரும் பாலியல் ரீதியான நடவடிக்கையில் இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வலைதளங்களில் பரப்பிவிடுவேன் என மிரட்டினார். எனவே ராஜேஷ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் ராஜேஷ் கைது செய்யப்படவில்லை. இதனால் அந்த இளம்பெண் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். தன் மீதான புகார் குறித்து ராஜேஷ் கூறியிருப்பதாவது, நான் சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் அலுவலகத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறேன். துணை நடிகை ஒருவர் மூலம் என் மீது புகார் கொடுத்த அந்த பெண் அறிமுகமானார்.

அவருக்கு வேலை வேண்டும் என கேட்டார், நானும் உதவி செய்வதாக சொன்னேன். பின்னர் நான் மாதம் ரூ 1.50 லட்சம் ஊதியம் வாங்கி வந்தேன். என்னால் மாத சம்பளத்திற்கு வேலை செய்ய முடியாது. குட்டி கிச்சன் என்ற உணவு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க போகிறேன், அதற்கு உதவி செய்யுங்கள் என்றார். இது தொடர்பாக வாட்ஸ் ஆப் வாயிலாக தகவல் பரிமாற்றம் நடந்த போது ஆபாசமாக பேசத் தொடங்கினார்.

நான் எந்த பெண்ணுக்குமே பாலியல் தொல்லை கொடுத்ததில்லை. பணம் பறிக்கும் நோக்கமும் இல்லை. எனக்கு திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதாக தெரிவித்தேன். ஆனால் என்னை பாலியல் ரீதியில் அவர்தான் எனக்கு தொல்லை கொடுத்தார். அதற்கான ஆதாரம் இருக்கிறது. அவர் மீது நான் பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன் என்றார். இந்த நிலையில் ராஜேஷை அண்ணா நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.