தப்பியோடிய காதல் ஜோடி.. காதலன் வீட்டைக் கொளுத்திய பெண் வீட்டார்.. ஜோலார்பேட்டை அருகே பரபரப்பு

 

திருப்பத்தூரில் இளம் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் ஆத்திரமடைந்த பெண் வீட்டார் காதலன் வீட்டை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்துள்ள பாச்சல் போஸ்ட் மேன் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. இவரது மனைவி பாரதி. இந்த தம்பதிகளுக்கு அட்சயா (18) என்ற மகள் உள்ளார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் விஜய்யும் (25) கடந்த ஒரு வருட காலமாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த பெற்றோர்கள் காதலர்களை கண்டித்துள்ளனர். 

இதன் காரணமாக இருவரும் விடியற்காலை 5 மணி அளவில் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். மேலும் பெண் வீட்டார் பெண்ணை பல்வேறு இடங்களிலும் தேடி உள்ளனர். பின்னர் காதலர்கள் இருவரும் தப்பி ஓடியது தெரியவந்தது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த பெண் வீட்டார் இன்று விஜயின் வீட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளனர். இதனால் வீடு மளமள வென தீ பற்றி எரிந்தது.

இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். 

மேலும் பெட்ரோல் ஊற்றி தீயை பற்ற வைத்த அட்சயாவின் தந்தை சிவா மற்றும் அண்ணன் அழகேசன் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறிய காரணத்தால் பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்திச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.