பிறந்து 9 நாட்களே ஆன பெண் சிசு... மூச்சைப்எ பிடித்து கொன்ற கொடூர தாய்.. ஈரக்குலையை நடுங்க வைத்த சம்பவம்!!

 

ஈரோடு அருகே மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் விரக்தியில் பிறந்து ஒன்பதே நாட்களான சிசுவை தாயே மூச்சைப் பிடித்து கொலை செய்த அதிர வைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பூனாட்சி நத்தமேடு பகுதியில் வசித்து வருபவர் பிரபு (30). இவரது மனைவி சகுந்தலா தேவி (21). இந்த தம்பதிக்கு மூன்றரை வயதில் மகாஸ்ரீ என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சகுந்தலா தேவி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். அவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18-ம் தேதி இரண்டாவதாக மீண்டும் பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த ஒன்பதாவது நாளான ஏப்ரல் மாதம் 27-ம் தேதி காலை, சகுந்தலா தேவி குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு தூங்க வைத்து விட்டு வெளியே வந்தார். பின்னர் வீட்டு வேலைகளை முடித்து விட்டு வீட்டிற்குள் சென்ற போது தூங்கிக் கொண்டிருந்த குழந்தை அசைவு ஏதுமின்றி இருந்ததால் உடனே மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, இதுகுறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் தலையில் உள்பக்கம் காயம் இருப்பது தெரியவந்தது. எனவே குழந்தை அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் குழந்தையின் தாய் சகுந்தலா தேவியிடம் விசாரணை நடத்தினர். 

அப்போது 2-வதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் குழந்தையின் தலையை அமுக்கி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சகுந்தலா தேவியை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.