16 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை.. மணப்பாறையில் நடந்த கொடூரம்!!

 

மணப்பாறை அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி மணப்பாறை பகுதியில் உள்ள தனியார் ஊதுபத்தி தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 1-ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற சிறுமி வீடு திரும்பாததால் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் சிறுமியின் செல்போன் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்த போது அவருடன் பேசிய நபர் பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பெங்களூரு சென்ற போலீசார் சிறுமியையும், அவருடன் இருந்த ரியாஸ், சதாம் ஆகியோரையும் மணப்பாறை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அவர்கள் அளித்த தகவலின் பேரில் வேலூரில் இருந்த சிறுமியின் காதலன் முபாரக் அலி என்பவரையும் கைது செய்தனர். பின்னர் நடந்த விசாரணையில் சிறுமியை காதலிப்பதாகக் கூறி பெங்களூரு அழைத்து சென்ற முபாரக் அலி பாலியல் வன்கொடுமை செய்ததும், அவர் பணிக்கு சென்ற பின் அவரது நண்பர்களான ரியாஸ், சதாம் ஆகியோரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில் 3 பேரையும் கைது செய்த போலீசார் சிறுமியை கடத்திச் செல்லுதல், பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கை மாற்றி 3 பேரையும் இன்று காலை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.