கானாமல் போன பிரபல பாடகி சடலமாக மீட்பு!! இருவர் கைது

 

அரியானாவை சேர்ந்த பாடகி சங்கீதா (26), டெல்லியில் வசித்து வந்தார். அரியான்வி மொழியில் பாடல்கள் பாடி வந்த இவர், கடந்த 11-ம் தேதி வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவர் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதை கண்டு பதறிப்போன அவரது குடும்பத்தினர் கடந்த 14-ம் தேதி போலீசில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், அரியானா மாநிலம் ரோட்டக் மாவட்டத்தில் உள்ள பைனி பரோன் கிராமத்தில் இளம் பெண்ணின் உடல் சிதைந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த போலீசார், பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேதச பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பாடகி சங்கீதா என்பது பின்னர் தெரியவந்தது. இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், பாடகி சங்கீதாவின் செல்போன் திடீரென ஆன் செய்யப்பட்டுள்ளதை அறிந்த போலீசார், டவர் லொகேஷன் வைத்து மேஹம் பகுதியைச் சேர்ந்த ரவி (20) என்பவரை மடக்கிப் பிடித்தனர். அதனை தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அகில் (20) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இருவரும் பாடகி சங்கீதாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

இசை வீடியோ எடுப்பதாகக் கூறி சங்கீதாவை கடத்திச் சென்று கொலை செய்து உள்ளனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பின், டெல்லி போலீசிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.