8 வயது சிறுவனை கத்தியால் குத்திய இளைஞர்.. ஓரின சேர்க்கைக்கு மறுத்ததால் விபரீதம்!

 

தூத்துக்குடி அருகே ஓரினசேர்க்கைக்கு மறுத்த 8 வயது சிறுவனை வாலிபர் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. இவர்களது மகன் அஸ்வின் குமார் (8). இவர், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில், நேற்று முன்தினம் காய்ச்சல் காரணமாக அஸ்வின்குமார் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தான்.

அவரது தாயார் மகளை பள்ளியில் விடச்சென்றிருந்த நிலையில், வீட்டின் முன்புறம் அஸ்வின் குமார் விழுந்து கிடந்தான். இதைப் பார்த்த அப்பகுதியினர், சிறுவனை தூக்கிப் பார்த்த போது கழுத்தில் ரத்தக்காயம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சூரங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அஸ்வின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த சிறுவனின் கழுத்தில் கத்திக்குத்து விழுந்த காயம்போல் இருப்பதால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில் கடற்கரை பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த அதே பகுதியை சேர்ந்த ஆரோக்கிய எட்வர்ட் கென்னடி மகன் தாமஸ் என்ற ரகசியம் (19) என்பவரை போலீசார் பிடித்தனர். விசாரணையில் அவர், சிறுவனை குத்திக் கொன்றது தெரியவந்தது.

அவர் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது, மது உள்ளிட்ட பழக்கங்களுக்கு அடிமையான நான், சம்பவத்தன்று அஸ்வின் குமார் வீட்டில் தனியாக இருப்பதை பார்த்து சென்றேன். அவனை தகாத உறவுக்கு அழைத்து வற்புறுத்தினேன். ஆனால் அஸ்வின் மறுத்து கூச்சலிட்டான். இதனால் ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த காய் நறுக்கும் கத்தியை எடுத்து அஸ்வின் கழுத்தில் குத்திவிட்டு தப்பிச் சென்றேன். இவ்வாறு கூறியுள்ளான். இதையடுத்து, தாமசை போலீசார் கைது செய்தனர்.