பிரபல நடிகர் ஷ்ரேயாஸ் தல்படேவுக்கு மாரடைப்பு.. மருத்துவமனையில் அனுமதி!

 

பிரபல பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான ஷ்ரேயாஸ் தல்படேவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

2002-ல் வெளியான ‘ஆன்கென்’ படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானவர் ஷ்ரேயாஸ் தல்படே (47). தொடர்ந்து நசீருதீன் ஷா நடித்த ‘இக்பால்’ படத்தில் சிறப்பு திறன் கொண்ட விளையாட்டு வீரராக நடித்து  புகழ் பெற்றார். மராத்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் மூலம் தல்படே மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்.

இந்நிலையில் நேற்று மாலை மும்பையில் ‘வெல்கம் டூ ஜங்கிள்’ என்ற படத்தின் படப்பிடிப்பின் போது தீடீரென மயங்கி விழுந்துள்ளார் ஷ்ரேயாஸ். உடனடியாக அருகில் இருந்த அந்தேரி பகுதியில் உள்ள பெல்லூவ் மருத்துவமனைக்கு இவரை அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் மயங்கி விழுந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இரவு 10 மணி அளவில் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது.

இது தொடர்பாக மருத்துவ நிர்வாகம், “இப்போது ஷ்ரேயாஸ் நலமுடன் இருக்கிறார். இன்னும் சில நாட்கள் இவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும், இதன் பின்னர் டிஸ்சார்ச் செய்யப்படுவார்” என்று தெரிவித்துள்ளது.