பிரபல நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி!

 

பிரபல நடிகர் ஜூனியர் பாலையா மூச்சுத் திணறல் ஏற்பட்டு இன்று காலை காலமானார். அவருக்கு வயது 70.

பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் 3வது மகன் ஜூனியர் பாலையா. ரகு என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் சினிமாவுக்காக ஜூனியர் பாலையா என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார். 1975-ம் ஆண்டு வெளியான ‘மேல்நாட்டு மருமகள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

அதனைத் தொடர்ந்து ’கோபுர வாசலிலே’, ‘கரகாட்டக்காரன்’, ‘சின்னத்தாயி’, ‘சங்கமம்’, ‘வின்னர்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தார். இவர் 40 வருடங்களாக தமிழ் சினிமாவில் அதிகளவில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதுமட்டுமின்றி தொலைகாட்சி சீரியல்களிலும் இவர் நடித்திருக்கிறார். 

2007-ம் ஆண்டு வரை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த இவர் சிறிய இடைவெளிக்குப் பிறகு 2012-ம் ஆண்டு சமுத்திரகனி இயக்கத்தில் வெளியான ‘சாட்டை’ திரைப்படத்தில் நடித்து கவனிக்கப் பெற்றார். அதனைத் தொடர்ந்து ‘கும்கி’, ‘தனி ஒருவன்’, ‘புலி’ ஆகியத் திரைபடங்களிலும் நடித்தார்.

இந்த நிலையில், இன்று (நவ. 2) அதிகாலை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் ஜூனியர் பாலையா மூச்சுத் திணறல் ஏற்பட்டு காலமானார். இன்று மாலை அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. ஜூனியர் பாலையா மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.