பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம்.. திரைபிரபலங்கள் இரங்கல்!

 

பிரபல பாலிவுட் நடிகர் சதீந்தர் குமார் கோஸ்லா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 80.

1960 மற்றும் 1970-களில் பாலிவுட் சினிமாவில் பிரபலமாக இருந்தவர் சதீந்தர் குமார் கோஸ்லா. பீர்பால் என்ற மேடைப் பெயரால் அறியப்பட்ட இவர், பூந்த் ஜோ பான் கயி மோதி, உப்கார், ரொட்டி கப்தா அவுர் மகான், கிராந்தி, நசீப், யாரனா, ஹம் ஹைன் ரஹி பியார் கே மற்றும் அஞ்சாம் போன்ற திரைப்படங்களில் தனது நகைச்சுவை நேரத்திற்காக பிரபலமானார். 

குணச்சித்திர நடிகராக இந்தி, பஞ்சாபி, போஜ்புரி மற்றும் மராத்தி போன்ற மொழிகளில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 1975-ல் தர்மேந்திரா மற்றும் அமிதாப் பச்சன் நடித்த ஷோலே படத்தில் அரை மீசையுடன் கைதியாக நடித்ததற்காக பீர்பால் மிகவும் நினைவுகூரப்படுகிறார்.

இந்த நிலையில், நடிகர் சதீந்தர் குமார் கோஸ்லா, மாரடைப்பு காரணமாக கோகிலாபென் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மாலை காலமானார் என்று அவரது மகள் ஷாலினி தெரிவித்தார்.

ஷாலினியின் கூற்றுப்படி, சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளுக்காக அவரது தந்தை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். ஒரு மாதத்திற்கு முன்பு அவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறுநீரகக் கோளாறு காரணமாக நாங்கள் அவரை 4 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதித்தோம். மாரடைப்பு காரணமாக அவர் செவ்வாய்கிழமை மாலை மருத்துவமனையில் காலமானார் என்று பிடிஐயிடம் தெரிவித்தார்.

மறைந்த கோஸ்லாவிற்கு மனைவியும் இரு பிள்ளைகளும் உள்ளனர். இவரது மரணத்திற்கு  திரையுலக பிரபலங்கள், நண்பர்கள், ரசிகர்கள்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.