லியோ பாடல் காட்சியால் சிக்கல்.. நடிகர் விஜய் மீது பரபரப்பு புகார்.!!

 

நடிகர் விஜய் மீது சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘வாரிசு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்து உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை த்ரிஷா, நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஸ்கின், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது. லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த 22-ம் தேதி விஜய் பிறந்த நாள் ஸ்பெஷலாக வெளியானது. 

இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் லியோ படத்திலிருந்து அனிருத் இசையில் நடிகர் விஜய் பாடியுள்ள நா ரெடி பாடல் வெளியானது. விஷ்ணு எடவன் எழுதியுள்ள இந்தப் பாடலை விஜய்யுடன் இணைந்து அனிருத் மற்றும் அசல் கோளாறு ஆகியோர் பாடியுள்ளனர்.

இந்த நிலையில் சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வம் என்பவர் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். நடிகர் விஜய் மீது போதை பொருள் தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தனது புகாரில் கூறியுள்ளார்.

போதை பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையில், ரவுடிசத்தை ஊக்குவிக்கும் வகையில் ’நா ரெடி’ பாடல் உள்ளதாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகார் மீது காவல்துறை ஆணையர் என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.