பிரபல நடிகரின் கட்டை விரல் அகற்றம்.. என்னாச்சு அவருக்கு?

 

சர்க்கரை வியாதி காரணமாக நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணனின் கால் கட்டை விரல் அகற்றப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் பாவா லட்சுமணன். இவர் பல படங்களில் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் மாயி, ஆனந்தம், ரோஜா கூட்டம், ஏப்ரல் மாதத்தில், அரசு, காதல் சடுகுடு, வின்னர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். குறிப்பாக மாயி படத்தில், ‘வா மா மின்னல்’ என்று இவர் பேசிய வசனம் இன்றுவரை பலரின் நினைவுகளில் நிற்கிகிறது.

சமீப காலமாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் வருமானமின்றி தவித்து வந்த பாவா லட்சுமணன், ஐந்து வருடங்களாக பெயிண்டர் வேலை செய்து வந்ததாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அத்துடன் திருமணங்களில் பீடா கூட மடித்து கொடுத்து இருப்பதாக ஒரு முறை பேட்டி அளித்து இருந்தார்.

இந்நிலையில் நீண்ட நாட்களாக சக்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த பாவா லட்சுமணன், சக்கரை நோயின் தாக்கம் அதிகமானதால், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவரின் கால் கட்டை விரல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.

அண்மையில் பாவா லட்சுமணனுக்கு உடல் நிலை தீவிரமாக மோசமானது. அவரது காலில் வேறு அடிபட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் இறந்துவிட்டதாக செய்திகள் உலாவின. கண்ணீர் அஞ்சலி நோட்டீஸும் ஓட்டப்பட்டது. 

இதையெல்லாம் பார்த்து வேதனை தெரிவித்த பாவா லட்சுமணன், “சுகர் மாத்திரை வாங்க காசு இல்லை. இந்த நேரத்தில் இப்படி செய்கிறார்கள். இதனைப் பார்த்து சந்தானம் உள்ளிட்ட பலர் என்னை தொடர்பு கொண்டு விசாரித்தார்கள். ஆனால் வடிவேலு பேசவில்லை” என்றார்.