புதிய வீடு... காவலாளியின் நிறைவேறா ஆசையை நிறைவேற்றிய KPY பாலா!

 

புதிய வீடு கட்டிக்கொடுத்து காவலாளியின் கனவை நடிகர் பாலா நிறைவேற்றி உள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் நடந்த ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சின் மூலம் பிரபலமானவர் பாலா. இவர் 6வது சீசனில் கலந்து கொண்டு டைட்டில் பட்டத்தையும் பெற்று இருக்கிறார். பல காமெடி ஷோக்களில் கலந்து கொண்ட பாலாவுக்கு, குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெரிய பிரேக் கொடுத்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதையும் கவர்ந்தார் பாலா. இதனைத் தொடர்ந்து, தும்பா, காக்டைல், ஜூங்கா, புலிப்பாண்டி உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். தற்போது சில ஷோக்களை ஆங்கரிங் செய்து வருகிறார்.

இவரை காமெடி செய்யும் நபராகவே பலருக்கு தெரியும். ஆனால் இவர் தான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு அறக்கட்டளையை வைத்து அதில் நிறைய பேருக்கு உதவி வருகிறார். முன்னதாக பழங்குடியின மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்தார். மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னையில் உள்ள பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரால் வீட்டில் தவித்து வந்த மக்களுக்கு 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1,000 வழங்கினார். இவரது செயல், பலருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், காவலாளியாக பணிபுரியும் முதியவருக்கு நடிகர் பாலா புதிய வீடு ஒன்றை கட்டிக் கொடுத்து அசத்தியுள்ளார். தனது வீட்டின் அருகே விளையாட்டு அரங்கின் காவலாளியாக பணிபுரியும் முதியவரின் ஆசையை தனது சொந்த பணத்தில் நிறைவேற்றி, அந்த காவலாளியின் 68-வது பிறந்த நாளுக்கு புதிய வீட்டை பரிசாக அளித்து மகிழ்ந்துள்ளார்.