ரஜினிக்கு அம்மாவாக நடித்த பழம்பெரும் நடிகை காலமானார்..! திரையுலகில் தொடரும் சோகம்!!

 

பழம்பெரும் நடிகை சி.வசந்தா உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 82.

ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் நாடக குழுவில் இடம் பெற்றவர் பழம்பெரும் நடிகை சி.வசந்தா. நாடகத்திலிருந்து திரையுலகில் நுழைந்நத இவர், 1965-ல் ஜெயசங்கர் நடிப்பில் வெளியான ‘இரவும் பகலும்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின் அதே ஆண்டில் அசோகன் நடிப்பில் வெளியான ‘கார்த்திகை தீபம்’ படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து, ‘மூன்றாம் பிறை’ படத்தில் ஸ்ரீதேவியின் அம்மாவாக, ‘ராணுவ வீரன்’ படத்தில் ரஜினிகாந்த்தின் அம்மாவாக நடித்துள்ளார். மேலும் மூன்று முகம் உள்ளிட்ட தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர் நேற்று மதியம் 3.40 மணியளவில் அவரது வீட்டில் காலமானார். இன்று (மே 20) பிற்பகல் 1:30 மணி அளவில் இவரது இறுதி சடங்கு நடைபெறுகிறது. அவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் இந்த மாதம் மட்டும் இதுவரை மூன்று பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த 3-ம் தேதி நடிகர் மனோபாலாவும், 18-ம் தேதி நடிகர் செவ்வாழை ராசுவும் மறைந்து நிலையில், தற்போது பழம்பெரும் நடிகை வசந்தா நேற்று காலமானார். இது தமிழ் திரையுலகில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.