பிரபல எழுத்தாளர் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்!

 

பிரபல எழுத்தாளரும் திரைப்பட வசனகர்த்தாவுமான ராசீ தங்கதுரை உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 53.

லெனின் பாரதி இயக்கத்தில் பல புதுமுகங்கள் நடிப்பில், கடந்த 2018-ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’. இந்த படத்தை நடிகர் விஜய்சேதுபதி தயாரித்திருந்தார். இதன் கதைக்களமும் வசனங்களும் பார்வையாளர்கள் மட்டுமின்றி திரைப்பட ஆர்வலர்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்திற்கு வசனம் எழுதியவர் ராசீ தங்கதுரை.

மேலும், விருதுகளை வென்று பலரது கவனத்தை ஈர்த்த ‘தேன்’ திரைப்படத்திற்கும் ராசீ தங்கதுரை வசனம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு வசனம் எழுதியது மட்டுமல்லாது அந்தப் படத்தில் சிறு கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவும் செய்திருந்தார். அதனை தொடர்ந்து கெவி, தாக்கல், ஆதாரம் உள்ளிட்ட படங்களுக்கும் வசனகர்த்தாவாக பணிபுரிந்துள்ளார். மேலும் பெயரிடப்படாத 4 திரைப்படங்களுக்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

ராசீ தங்கதுரை உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனில்லாமல் இன்று ஆண்டிப்பட்டியில் காலமானார். இவரது மறைவு திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கதிர்நரசிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராசீ தங்கதுரை. எழுத்தாளர் மற்றும் வசனகர்த்தாவான இவர் இருதய பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும் ராசீ பிரியன், சுகதேவ் திலீபன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

ஆண்டிபட்டி கதிர்நரசிங்காபுரம் கிராமத்தில் இன்று மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. ராமையா - சீனியம்மாள் தம்பதியரின் மகனான தங்கதுரை, பெற்றோர் மீதிருந்த அன்பால் தனது பெயரை ராசீ தங்கதுரை என மாற்றிக்கொண்டார்.  பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்த இவருக்கு இலக்கியத்தின் மீதிருந்த ஆர்வத்தால் சிறு வயதிலேயே கவிதை, கதை எழுதுவதில் நாட்டம் கொண்டு சுமார் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார்.