பிரபல தயாரிப்பாளர் காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி!

 

பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஏ. ராஜ்கண்ணு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 77.

16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், பூ பூத்த நந்தவனம், கன்னிப்பருவத்திலேயே, வாலிபமே வா, பொண்ணு பிடிச்சிருக்கு, மகாநதி உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் எஸ்.ஏ. ராஜ்கண்ணு. இவர் ‘அர்த்தங்கள் ஆயிரம்’ என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கி உள்ளார்.

தாம்பரம் அருகே உள்ள சிட்லபாக்கத்தில் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்த பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஏ. ராஜ்கண்ணு கடந்த மே மாதம் குளிக்கும் போது பாத்ரூமில் வழுக்கி விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

ஆனால், வயது மூப்புக் காரணமாக உடனடியாக அவர் குணமாகவில்லை. கிட்டத்தட்ட ஒரு மாத காலம் நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று இரவு காலமானதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இவரின் மறைவு திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவரது மறைவுக்கு இயக்குநர் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார், அதில், “ ‘16 வயதினிலே’ திரைப்படத்தின் வாயிலாக  என்னை இயக்குனராக அறிமுகம் செய்து, என் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றிச் சென்ற என்  முதலாளி திரு. S.A.ராஜ்கண்ணு அவர்களின் மறைவு, பேரதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரின் மறைவு எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும். ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்.

அதேபோல், நடிகை ராதிகா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தில், “நான் அறிமுகமான கிழக்கே போகும் ரயில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு என் திரையுலக பயணத்தில் பெரும் பங்கு வகித்தவர். அவர் மீது மிகுந்த மரியாதையும், அற்புதமான நினைவுகளும் உள்ளது.  அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.