விரைவில் ‘தனி ஒருவன் 2’.. வெளியாகிறது அதிகாரப்பூர்வ அப்டேட்!

 

ஜெயம் ரவி நடிப்பில் உருவான ‘தனி ஒருவன்’ படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடையுள்ள நிலையில், இரண்டாம் பாகத்துக்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘தனி ஒருவன்’. இந்தப் படத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா, ஹரிஷ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருந்த இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது. ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் அப்போதே ரூ.100 கோடி வசூலை எட்டி சாதனை படைத்தது.

சித்தார்த் அபிமன்யு என்ற வில்லன் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும், மித்ரன் ஐபிஎஸ் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவியும் வாழ்ந்திருந்தார்கள் என்றே கூறலாம். இதுவரை ஜெயம் ரவியின் படங்களில் தனி ஒருவனுக்கென தனி இடம் என்றும் உண்டு. ரசிகர்களின் ஆதரவைப் பெற்று விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படம் வெளியானது முதலே 2வது பாகம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது.

இந்நிலையில், இப்படம் வெளியாகி வரும் ஆகஸ்ட் 28-ம் தேதியுடன் 8 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. அன்று படத்தின் இரண்டாம் பாகத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் மோகன்ராஜாவை பொறுத்தவரை அவர் கடைசியாக சிரஞ்சிவி நடித்த ‘லூசிஃபர்’ ரீமேக் படத்தை தெலுங்கில் இயக்கியிருந்தார். இதையடுத்து அவர் ‘தனி ஒருவன் 2’ இயக்க உள்ளதாகவும் அதற்கான அறிவிப்பு மேற்கண்ட நாளில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.