துணை நடிகை தற்கொலை.. புஷ்பா பட நடிகர் திடீர் கைது..!

 
துணை நடிகை தற்கொலை வழக்கில் பிரபல நடிகர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2021-ல் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த படம் புஷ்பா. இந்தப் படம் தெலுங்கு, கன்னடம், தமிழ் என இந்தியளவில் பெரும்பாலான மொழிகளில் ஹிட்டடித்து ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. இந்தப் படத்தில், அல்லு அர்ஜூனின் நண்பனாக கேசவா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் ஜெகதீஷ். தெலுங்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று அதன் பின்னர் பல படங்களில் நடித்து வந்தார். 

இந்த நிலையில், தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த துணை நடிகை ஒருவர், தனிமையில் ஆண் ஒருவருடன் நெருக்கமாக இருந்தபோது, அதனை வீடியோவாகவும், புகைப்படங்களாகவும் நடிகர் ஜெகதீஷ் எடுத்து வைத்துக்கொண்டு, அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று துணை நடிகையை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது. 

நடிகர் ஜெகதீஷின் மிரட்டல் ஒரு கட்டத்தல் அதிகமாகவே, இதனால் மனமுடைந்த நடிகை நவம்பர் 29-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் ஜெகதீஷ் மீது புகார் அளிக்கப்பட்டு, கடந்த சில நாட்களாக போலீசார் நடிகர் ஜெகதீஷைத் தேடி வந்தனர். இறுதியாக நேற்று பஞ்சகுட்டா போலீசாரால் நடிகர் ஜெகதீஷ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் புஷ்பா 2 படத்திலும் ஜெகதீஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . அவர் நடிக்க வேண்டிய பகுதிகள் பாதி படமாக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளனர்.