அதிர்ச்சி.. பிரபல மலையாள இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை.. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

 

பிரபல இளம் நடிகை அபர்ணா நாயர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள சீரியல்களில் நடித்து முன்னணி டிவி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் அபர்ணா நாயர் (31). கடந்த 2005-ம் ஆண்டு ‘மாயூகம்’ என்ற மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆன அபர்ணா நாயர், தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

தொடர்ந்து நோட்புக், நிவேத்யம், மேகதீர்த்தம், எதுவும் நடக்கும், காக்டெய்ல், மேமா நிலவு, காயம், அழகு, ரன் பேபி ரன், ஒரு குட்டி சோத்யம், அமைதி, நொடிகள், தெருவிளக்கு, பாலன் வக்கீல், கல்கி, தாமர, ஒருத்தி, உணர்தல் உள்ளிட்ட ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ளார். சந்தன மழை, மைதிலி வீண்டும் வரும் மற்றும் தேவஸ்பர்ஷம் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகை அபர்ணா நாயர் நேற்று மாலை திருவனந்தபுரத்தில் உள்ள தனது வீட்டின் அறையில் தூக்கில் தொங்கியதாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை மீட்ட குடும்பத்தினர் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் போலீசாருக்கும் தெரியப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நடிகை அபர்ணா நாயர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. எனினும், நடிகை அபர்ணாவுடன் தொடர்புடையவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அபர்ணா நாயர் தூக்கில் தொங்கியபோது அவரது தாயார் மற்றும் சகோதரி மட்டுமே வீட்டில் இருந்ததாக சொல்லப்படுகிறது. எனவே அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அபர்ணா நாயரின் கணவரும் குழந்தைகளும் அந்த சமயத்தில் வீட்டில் இல்லை என்றும் வெளியே சென்றுவிட்டதாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. எனவே இது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரபல மலையாள நடிகை மர்மமான முறையில் உயிரிழந்து இருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.