அதிர்ச்சி! பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்!!

 

பிரபல நகைச்சுவை நடிகர் மம்முகோயா உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 76.

மலையாளத்தில் நாடக கலைஞராக தனது வாழ்க்கையைத் துவங்கியவர் மம்முகோயா. கடந்த 1979-ம் ஆண்டு ‘அன்யாருடே பூமி’ என்றப் படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமான அவர், நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து முத்திரை பதித்தார். மாநில அரசு விருதுகளை இரண்டுமுறை வென்றுள்ள மம்முகோயா, சுமார் 400-க்கும் மேற்பட்ட படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

தமிழில் ‘அரங்கேற்ற வேளை’, ‘காசு’, ‘கோப்ரா’ ஆகியப் படங்களில் மம்முகோயா நடித்துள்ளார். மேலும், ‘பிளமென்ஸ் ஆஃப் பாரடைஸ்’ என்ற பிரெஞ்சு படத்தில் ஜோசப் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறிப்பிடத்தக்க சில தொலைக்காட்சி தொடர்களிலும், சில குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் களிக்காவு என்ற இடத்தில் கால்பந்து போட்டியை துவங்கி வைப்பதற்காக கடந்த திங்கள்கிழமை (ஏப்.24) இரவு சென்றுள்ளார். அப்போது அவருடன் செல்ஃபி எடுக்க மக்கள் அவரை சூழ்ந்தனர். அப்போது  உடல் நலக்குறைவு ஏற்பட்டு மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். 

அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து கோழிக்கோடு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று (ஏப்.26) மாரடைப்பு காரணமாக மருத்துமனையில் மம்முகோயா உயிரிழந்துள்ளார்.

பழம்பெரும் நடிகர் மம்முகோயாவின் மரணம், கேரள மாநிலத்துக்கும் மலையாள திரையுலகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், எதிர்க்கட்சி தலைவர் வி.டி. சதீஷன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மம்முகோயா உயிரிழந்ததையடுத்து, திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.