அதிர்ச்சி! பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்.. திரையுலகில் தொடரும் சோகம்!!

 

பிரபல நடிகர் சரத்பாபு ஐதராபாத் உள்ள மருத்துவமனையில் இன்று காலமானார். அவருக்கு வயது 71.

1973-ம் ஆண்டு தெலுங்கு படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார் நடிகர் சரத்பாபு. அதன்பின், 1977-ல் கே.பாலச்சந்தர் இயக்கிய ‘பட்டினப்பிரவேசம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, ‘நிழல் நிஜமாகிறது’, ’முள்ளும் மலரும்’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘நெற்றிக்கண்’, ‘47 நாட்கள்’, ‘சட்டம்’, ‘மனக்கணக்கு’, ‘வேலைக்காரன்’, ‘முத்து’, ‘அண்ணாமலை’, ‘ஆளவந்தான்’, ‘மாசாணி’ உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் சரத்பாபு நடித்து பன்முகக் கலைஞனாக திகழ்ந்தார். முதலில் கதாநாயகனாக அறிமுகமான சரத்பாபு, பின்னர் குணச்சித்திர நடிப்பால் தனக்கென்று தனி இடம் பிடித்துக் கொண்டார். சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி ஆகியோரோடு இணைந்து நடித்துள்ளார்.

இவர் வயது முதிர்வு காரணமாக திரையுலகில் இருந்து விலகி, ஐதராபாத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் முழு ஓய்வில் இருந்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். ஆனால் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், கடந்த ஏப்ரல் மாதம் 20-ம் தேதி ஐதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், ஐதராபாத் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையிலிருந்த நடிகர் சரத்பாபுவின் உடல்நிலை இன்று மோசமடைந்தது. இன்று மதியம் அவரது பல உறுப்புகள் செயலிழந்ததால் சரத்பாபு உயிரிழந்ததாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.